உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று நடந்தது.உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் உடனுறை தர்மராஜன் கோயிலில் ஆண்டுதோறும் மஹோத்சவ மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில், இந்த ஆண்டு மஹோத்சவ மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 27ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடங்கியநாள் முதல் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையினை கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்கள காட்சியினை தத்ரூபமாக நடத்தப்பட்டது. பீமன் வேடமணிந்தவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைப்பெற்றது. விழாவிற்காக, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மாலையில் கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்க தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர், இரவு திரவுபதி அம்மன் பஞ்சபாண்டவர்களுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.